சேலம் ரயில் கோட்ட அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு
சேலம்: சேலத்தில் உள்ள கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். விடிய விடிய சோதனை நடந்தது.
அலுவலகத்தி்ல் உள்ள நிதிப் பிரிவில் இந்த ரெய்டு நடந்தது. சேலம் சந்திப்பு ரயில் நிலையம் அருகேதான் கோட்ட ரயில்வே அலுவலகம் உள்ளது.
சேலம் கோட்டம் தொடர்பான அனைத்து பிரிவுகளும் இங்கு இயங்கி வருகின்றன. ரயில்வே கட்டிடங்கள் கட்டுதல், ரயில் பாதை சீரமைத்தல் உள்பட கான்டிராக்டர்கள் மூலமாக நிறைவேற்றப்படும் பணிகளுக்கு இங்குள்ள நிதி மற்றும் கணக்கு பிரிவில் இருந்து பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால் இப்பிரிவு எந்நேரமும் பரபரப்பாக இருக்கும்.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பணி முடிந்து பணியாளர்கள் சென்றுவிட்டனர். நிதி மற்றும் கணக்குப் பிரிவு மட்டும் இயங்கி வந்தது. 6.30 மணிக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவினர் அதிரடியாக நிதி பிரிவுக்கு சென்றனர்.
ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை எடுத்து விசாரணை நடத்தினர். பணி முடிந்தும் பில் தொகையை பாஸ் செய்யப்படாமல் நிறுத்தி வைத்தது தொடர்பாக விசாரித்தனர். கோட்ட நிதி மேலாளர் செந்தமிழ் செல்வன் அறையிலும் சோதனை நடத்தினர்.
நள்ளிரவுக்கு பிறகும் சோதனை தொடர்ந்து நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கான்டிராக்டர்களுக்கு பில் பாஸ் செய்ய நிதி பிரிவினர் கமிஷன் கேட்பதாகவும் கமிஷன் வராவிட்டால் பில்லை நிறுத்தி வைப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்தே சிபிஐ ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது.
ரெய்டு காரணமாக சேலம் ரயில்வே கோட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.