திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிக்கும்: கருணாநிதி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக வற்புறுத்தி வரும் நிலையில், கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிக்கும் என முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக கட்சி அலுவலகத்திற்கும், தலைமைச் செயலகத்திற்கும் வராமல் இருந்தார் முதல்வர். நேற்று முதல் தலைமைச் செயலகத்திற்கு திரும்பி தனது பணிகளைத் தொடங்கினார்.
இன்று அவர் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்கள் முதல்வரை சந்தித்தனர். அப்போது முதல்வர் கருணாநிதி கூறியதாவது
கேள்வி: தே.மு.தி.க. விற்கு நீங்கள் அழைப்பு விடுத்திருந்தீர்களே?
பதில்: நான் ஒன்றும் அழைப்பு விடுக்கவில்லை. தமிழ்நாட்டில் சில பத்திரிகையாளர்கள் அல்லது செய்தியாளர்கள்- அவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணியை உருவாக்குகிறார்கள். அவர்களே அதை உடைக்கிறார்கள். மீண்டும் அதை இணைக்கிறார்கள்.
கூட்டணி உறுதியாகவே உள்ளது..
கேள்வி: பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை தி.மு.க.வும் காங்கிரசும் இறுதி செய்து விட்டதா? பதில்:- இறுதி என்று கேட்க கூடாது. உறுதி செய்து விட்டதா? என்று தான் கேட்க வேண்டும். உறுதியாகத்தான் இருக்கிறோம்.
கேள்வி: பா.ம.க. தொடர்பு கொண்டார்களா? பதில்:- பா.ம.க. இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் தொடர்பு கொண்டு பேசவில்லை.
திருமாவளவன் நீடிப்பார்...
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உங்கள் அணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று சொல்கிறாரே?
பதில்: அவர் நீண்ட காலமாக எங்கள் அணியில் உள்ளார். ஏனென்றால் சமத்துவ கொள்கை, ஜாதி ஒழிப்பு, பொதுவுடைமை கொள்கை இவற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், எங்களுக்கும் முரண்பாடும் இல்லை.
குறிப்பாகவும் சிறப்பாகவும் சேது சமுத்திர திட்டத்தில் நாங்களும் விடு தலைசிறுத்தை கட்சியும் ஒரே குறிக்கோள் கொண்டவர்கள். அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள் என்றார் கருணாநிதி.
வக்கீல்கள் பிரச்சினை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அது நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் இடையிலான பிரச்சினை என்று முதல்வர் பதிலளித்தார்.