கூட்டணி-பண்ருட்டி ராமச்சந்திரன் டெல்லி பயணம்?
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தேமுதிகவுக்கு 36 தொகுதிகளில் இந்த கட்சிக்கு 5 முதல் 13 சதவீத ஓட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சராசரியாக அந்தக் கட்சிக்கு 8 சதவீத வாக்கு உள்ளது.
இதனால் அந்தக் கட்சியை எப்படியாவது கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக விஜய்காந்துடன் தொலைபேசி மூலம் டெல்லியில் இருந்து மூத்த தலைவர்கள் பேசினர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் பேசினார்.
மேலும் பல தலைவர்கள் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் சுதீஷுடன் பேசி வருகின்றனர். ஆனாலும் இதுவரை விஜய்காந்த் பிடி கொடுக்கவில்லை.
இந் நிலையில் காங்கிரஸ் தலைமையின் கோரிக்கையை ஏற்று பண்ருட்டி ராமச்சந்திரன் ஓரிரு தினங்களில் டெல்லி செல்வார் என்று தெரிகிறது. அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
கோவையில் விஜய்காந்த் ரகசிய ஆலோசனை:
இதற்கிடையே தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜயகாந்த் கோவையிலுள்ள தனது தோட்டத்தில் ரகசிய ஆலோசனை நடத்தினார்.
தேமுதிக நிர்வாகியின் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வந்த அவர் விமான நிலையத்திலிருந்து நேராக சூலூரையடுத்த ராவத்தூர் சென்றார்.
அங்குள்ள தனது தோட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்துப் பேசினார். பின்னர் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வ்து மீண்டும் ஆலோசனையைத் தொடர்ந்தார்.
விமான நிலையத்திலும் தோட்டத்திலும் நிருபர்களால் விஜய்காந்தை சந்திக்க முடியவி்ல்லை. இப்போது சந்திக்க விரும்பவில்லை என்றும், தேர்தல் குறித்து முடிவெடுத்த பின் சந்திப்பதாகவும் நிர்வாகிகள் மூலம் சொல்லி அனுப்பிவிட்டார்.
தனித்தே போட்டி-மச்சான்:
இதற்கிடையே சென்னை ராயபுரத்தில் நடந்த தேமுதிக தேர்தல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் இளைஞரணி செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான சுதீஷ் தொண்டர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததில் தேமுதிகவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதை காண முடிந்தது. தேமுதிக மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணி வைக்க திமுக, அதிமுகவினர் போட்டி போட்டு பேசி வருகின்றனர். கேட்கும் தொகுதிகளை தருவதாக கூறுகிறார்கள். பலமான கட்சி என்பதால் தான் வலை வீசுகின்றனர். நமது வளர்ச்சிக்குக் காரணம் மக்கள் தான்.
நாம் ஏன் பிற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைய முடியாது?. அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்தால் அந்த நிலை ஏற்படும்.
தேமுதிக யாருடனும் கூட்டணி வைக்காது. இதில் விஜயகாந்த் உறுதியாக உள்ளார். நமக்கு மக்களுடன் தான் கூட்டணி. உங்களை நம்பித் தான் தேர்தலில் நிற்கிறோம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இன்றே தேர்தல் பணிகளை தொடங்குங்கள் என்றார்.
பிரேமலதாவுக்காக மனுக்கள்:
இதற்கிடையே ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா போட்டியிடக் கோரி காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் முருகேசன் மனு தாக்கல் செய்தார். அதே போல விருதுநகர் தொகுதியில் பிரேமலதா போட்டியிட தாமரை கண்ணனும், கோவை தொகுதியில் போட்டியிடக் கோரி பாண்டியனும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்குமாக இதுவரை 400க்கும் அதிகமான தேமுதிகவினர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
விஜயகாந்த்துக்காக 15 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.