சத்யம் நிறுவனத்திலிருந்து 1 மாதத்தில் 3500 பணியாளர் விலகல்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்திலிருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3500 பணியாளர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வேறு வேலைக்குத் தாவியுள்ளனர்.
சத்யம் நிறுவனத்தில் 47570 பணியாளர்கள் இருந்தனர், ராமலிங்க ராஜு தனது மோசடிகளை ஒப்புக் கொண்டு பதவி விலகிய போது. அப்போதே கிட்டத்தட்ட 20 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் எல்லோருக்கும் வேலை கிடைத்துவிடவில்லை. மேலும் தடுமாற்றத்திலிருந்தாலும், சம்பளம் மட்டும் சரியாகக் கிடைத்ததால், வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் சத்யம் நிறுவனத்தில் பலர் தங்கிவிட்டனர். மேலும் சத்யம் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் பணியாளர்களை வெளியில் போகவேண்டாம் என கேட்டுக் கொண்டது.
இதையும் மீறி கடந்த 1 மாதத்தில் மட்டும் 3500 பணியாளர்கள் வேறு நிறுவனங்களுக்குத் தாவிவிட்டனர். இப்போதைய கணக்கெடுப்பின்படி, சத்யம் பணியாளர் எண்ணிக்கை 44130 ஆகும்.
"முன்பெல்லாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது வாய்ப்புகள் வந்தவண்ணமிருந்தன. ஆனால் இப்போதோ, மாதக்கணக்கில் ஆகிறது புதிய வாய்ப்பு கிடைக்க. அப்படிக் கிடைத்துப் போனவர்கள்தான் இந்த 3500 பேரும். வாய்ப்பில்லாதவர்கள், நல்ல வாய்ப்பு வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள்.." என்கிறார் சமீபத்தில் வெளியேறிய ஒரு முன்னாள் சத்யம் பணியாளர்.