ராஜ்நாத் Vs ஜேட்லி: ஆர்எஸ்எஸ்- அத்வானி சமரச முயற்சி
டெல்லி: நாடாளுமன்றld தேர்தல் நேரத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும், பொதுச் செயலர் அருண் ஜேட்லிக்கும் இடையே எழுந்துள்ள மோதல் கட்சியின் தேர்தல் பணிகளை கடுமையாக பாதித்து வருகிறுத. இதையடுத்து இவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் மூத்த தலைவர் அத்வானியும் ஆர்எஸ்எஸ்சும் ஈடுபட்டுள்ளனர்.
வட கிழக்கு மாநில தேர்தல் இணை ஒருங்கிணைப்பாளராக சுதன்சூ மிட்டல் என்ற தொழிலதிபர் நியமிக்கப்பட்டது தான் இந்த பிரச்சினைக்கு மூல காரணம் எனத் தெரிகிறது. தன்னை கேட்காமல் நியமிக்கப்பட்ட மிட்டல் நீக்கப்பட வேண்டும் என்பதில் ஜேட்லி பிடிவாதமாக இருக்கிறார். அதே சமயத்தில் தன்னால் நியமிக்கப்பட்டவரை வெளியேற்ற முடியாது என ராஜ்நாத்தும் உறுதியாக இருக்கிறார். இதை இவர்கள் ஒரு கெளரவ பிரச்சினையாக கருதி வருகின்றனர்.
இதனால் தேர்தல் பணிகளை கவனிப்பதை விட இந்த மோதலை எப்படி தீர்ப்பது என்பதில் தான் தற்போது பாஜக தலைமை அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றது.
இந்த மோதல் காரணமாக அருண் ஜேட்லி, கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். மிட்டலை நீக்காவிட்டால் இன்று தேதி மபி, கர்நாடகா, டெல்லி மற்றும் பீகார் மாநில நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் தேர்வுக்கான கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை என ஜேட்லி உறுதியாக கூறிவிட்டார்.
அவருடன் சேர்ந்து கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் இந்தக் கூட்டத்தை புறக்கணி்த்துவிட்டார். அவருக்கும் கர்நாடக பாஜக மூத்த தலைவரான அனந்த்குமாருக்கும் இடையே யாருக்கு சீட் கொடுப்பது என்பதில் மோதல் நடந்து வருகிறது. அனந்த்குமாரை அத்வானி, ஆர்எஸ்எஸ் ஆதரிப்பதால் கோபத்தில் இக் கூட்டத்தை எதியூரப்பா புறக்கணித்துவிட்டார்.
இந்நிலையில் ஜேட்லி-ராஜ்நாத் சிங் இடையே சமாதானம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் பொது செயலாளர் சுரேஷ் சோனி முயற்சித்து வருகிறார். சுரேஷ் சோனி ஜேட்லியை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். இப்பிரச்சினை கட்சியின் தேர்தல் பணிகளை பாதிக்கும் என கூறியுள்ளார்.
இவரை தவிர்த்து பாஜக முக்கிய தலைவரான அத்வானி, பிற தலைவர்களான ராம் லால், முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு, கட்சியின் பொருளாளர் ராம்தாஸ் அகர்வால் ஆகியோரும் ஜேட்லியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இது குறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், ஜேட்லி கட்சி பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். அவரது பொறுப்புகள் நன்றாக கவனித்து வருகிறார். கட்சியின் உள் விவகாரங்களை பற்றி பொது இடங்களில் பேச முடியாது என்றார்.