ஈழம்-தீக்குளித்த பாமக, வி.சி தொண்டர்கள் மரணம்
அரியலூர்: இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவர் தீக்காயத்திற்குப் பலியாகினர்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவிழியைச் சேர்ந்த பாமக தொண்டர் ராஜசேகர் (30). இலங்கைத் தமிழர்கள் படுகொலையை நினைத்து பெரும் வேதனையில் இருந்து வ்நதார்.
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளிப்பேன் என்றும் அவரது வீட்டில் கூறி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், ராஜசேகரனை சமாதானப்படுத்தி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்.
ஆனால் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது வீட்டு வாசல் முன்பாக ராஜசேகர் தீக்குளித்து விட்டார்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் தஞ்சை அரசினர் சரபோஜி மன்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ராஜசேகர்.
ராஜசேகருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.
இதேபோல கடலூரை அடுத்த அன்னவெலி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் ஆனந்த் என்பவரும் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்தார்.
கருகிய நிலையில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆனந்ததும் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே இலங்கைத் தமிழர்களுக்காக சென்னை முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சிவப்பிரகாசம், ஸ்ரீதர் என்கிற எழில்வளவன், கடலூர் தமிழ்வேந்தன், சிவகாசி கோகுலரத்தினம், வாணியம்பாடி சீனிவாசன் ஆகிய 9 பேர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.