மீண்டும் கூட்டணி ஆட்சி தான்-ப.சிதம்பரம்
காரைக்குடி: மத்தியில் மீண்டும் கூட்டணி அரசுதான் அமையும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தி்ல் மீண்டும் வலிமையான, மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கண்டிப்பாக அமையும். கூட்டணியில் யார் இருப்பார்கள் என்பது பற்றி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் தெளிவாகும்.
இன்றைய சூழ்நிலையில் மத்தியில் கூட்டணி அரசுதான் அமைய முடியும். நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெறக் கூடிய ஒரு கட்சிதான் ஆட்சிக்குத் தலைமை ஏற்க வேண்டும். அப்படிப் பார்த்தால் 2 கட்சிகளுக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது. ஒன்று காங்கிரஸ் கட்சி. இன்னொன்று பாரதிய ஜனதா.
இதில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைத்தான் மக்கள் விரும்புவார்கள். காரணம் மத்தியில் அமைகிற அரசு ஒரு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் மனதிலும் ஆழமாக ஓடக் கூடிய அடிப்படைக் கொள்கை.
மத்திய அரசுக்கு மதசார்பு என்று வந்துவிட்டால் அது நாட்டில் குழப்பம், கலவரத்தைத் தான் உண்டு பண்ணும். மதசார்பற்ற அரசாக இருந்தால்தான் எல்லோருக்கும் பாதுகாப்பு உணர்வு ஏற்படும்.
ஐந்தாண்டு காலச் சாதனையை எந்த மேடையிலும் நான் விவாதிக்க முடியும். ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டம், விவசாயிகளுக்கு அளித்த பல ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகள், கல்விக் கடன் திட்டம், விவசாயக் கடன் ரத்து என சில உதாரணங்கள்தான் சொல்லுகிறேன்.
இந்தியாவில் 50 இடங்களுக்கு மேல் போட்டியிடாத ஒரு கட்சி (மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள்) மத்திய அரசிலே நான் தலைமை பொறுப்பை ஏற்பேன் என்று எப்படிச் சொல்ல முடியும். எனவே, மூன்றாவது அணி நிலையற்றதாகவே இருக்கும். பல கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டு முயற்சி என்றுதான் அதைச் சொல்ல முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications