வருண் காந்திக்கு மேலும் சிக்கல்-2 வழக்குகள்

முஸ்லீம்களைக் கொல்வேன் என்று பேசியது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பதட்டத்தை ஏற்படுத்துதல், வன்முறையை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தப் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
முதல் வழக்கைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டவுடனேயே வருண் காந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நாளை முற்பகல் 11 மணிக்குள் வருண் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே வருண் காந்தியின் பேச்சு இடம் பெற்றுள்ள வீடியோ டேப்புகளை தடவியல் சோதனைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் கலந்து கொண்ட, பேசிய அனைத்து கூட்டங்களின் வீடியோ பதிவுகளையும் கண்டுபிடித்து சமர்ப்பிக்கவும் உ.பி. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்:
இதற்கிடையே, உ.பி. மாநிலம் பிசால்பூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு புதுப் புகார் வருண் காந்தி மீது கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அக்தர், பிசால்பூருக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
வருணுக்கு தாமரை கிடைக்குமா?
முஸ்லீம்களுக்கு எதிராக அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள வருண் காந்திக்கு பாஜகவின் தாமரைச் சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
வருண் காந்திக்கு தாமரைச் சின்னத்தை தரக் கூடாது என்று தேர்தல் ஆணையர்களி்ல் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் மற்ற இருவரும் பாஜகவிடமிருந்து விளக்கப் பதில் வருவதற்குள் அந்த முடிவை எடுக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளனர். இதனால் வருணுக்கு தாமரை கிடைக்காமல் போவது தற்காலிகமாக தப்பியிருக்கிறது.
வருண் காந்தியும், பாஜகவும் நாளைக்குள் தங்களது விளக்கத்தை அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. அது வந்த பின்னர் தாமரைக்கு தடை வருமா, வராதா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications