கடந்த முறையை விட கூடுதலாக சீட் கேட்கும் மதிமுக

கடந்த லோக்சபா தேர்தலில் மதிமுக, திமுக கூட்டணியில் இடம் பெற்று 4 இடங்களில் போட்டியிட்டது. தற்போது அதிமுக கூட்டணிக்கு வந்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுத் தலைவர் திருப்பூர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே இரண்டு தடவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் முன்னேற்றகரமான போக்கோடு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிடவேண்டும் என்ற உணர்வு எல்லா கட்சிகளுக்கும் இருக்கும், அதுபோல ம.தி.மு.க.வும் கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட கூடுதல் இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு உள்ளது என்றார் துரைசாமி.
பாமக வருமா .. வைகோ விளக்கம்
இதற்கிடையே, நேற்று மதிமுக அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக கூட்டணிக்கு பாமக வருமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு வைகோ, இது குறித்து இப்போது கூறமுடியாது. பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாகவும், விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications