டெல்லியில் பண்ருட்டி-சுதீஷ்: காங்குடன் பேச்சு?
விஜய்காந்தை கூட்டணிக்குக் கொண்டு வர காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. மத்திய அமைச்சர் வாசன் இந்த முயற்களி்ல் ஈடுபட்டுள்ளார்.
விஜய்காந்தை இழுப்பது குறித்து திமுக தரப்பில் பெரிய அளவில் வெளிப்படையாக பேசாவிட்டாலும் வாசனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மூலமாக திமுக உதவி வருகிறது.
இந்த இருவரும் விஜய்காந்த் தரப்புடன் பேச்சு நடத்தி வரும் நிலையில் அதிமுகவும் விஜய்காந்தை விடவில்லை. சசிகலா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூலமாக விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோருடன் அதிமுக பேசி வருகிறது.
இரு கூட்டணிகளுமே விஜய்காந்துக்கு நிறைய இடங்களும் கூடவே இன்னும் சில உதவிகளும் செய்வதாக உறுதியளித்துள்ளன. ஆனால், கூட்டணி விஷயத்தில் விஜய்காந்த் ரொம்பவே குழம்பிப் போய் இருக்கிறார்.
கூட்டணிக்கு கட்சியினரும் நிர்வாகிகளும் நெருக்கினாலும் அவரது நலம் விரும்பிகள் தனித்து நிற்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அப்போது தான் 2011 சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று கூறி வருகின்றனர்.
இந் நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனும் சுதீசும் இன்று டெல்லி சென்றுள்ளனர்.
அவர்கள் டெல்லியில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தேமுதிக தரப்பில் கேட்டபோது தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து முரசு சின்னத்தை அனைத்து தொகுதிகளிலும் எங்களுக்கு ஒதுக்குமாறு வலியுறுத்தவே அவர்கள் டெல்லி சென்றுள்ளனர் என்றனர்.
இதற்கிடையே தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் 22ம் ந்தேதி வரை மனு செய்யலாம். அதுவரை கூட்டணி குறித்து விஜய்காந்தை எந்த முடிவையும் அறிவிக்க மாட்டார் என்றே தெரிகிறது.
தினந்தோறும் விருப்ப மனு தாக்கல் மூலம் கட்சிக்கு சராசரியாக ரூ.10 லட்சம் வந்து கொண்டுள்ளது. கூட்டணியை அறிவித்தால் தொண்டர்கள் விருப்ப மனு தாக்கலை நிறுத்திவிடுவார்கள். வரவும் நின்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயத்தில் படை எடுக்கும் நிர்வாகிகள்:
இதற்கிடையே திமுக, அதிமுக வலுவாக உள்ள பல தொகுதிகளில் தேமுதிக நிர்வாகிகள் சீட் வேண்டி மனு தாக்கல் செய்வது மந்த கதியில் உள்ளதாகக் கூறப்படுகின்து.
இதையடுத்து தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் உடனே விருப்ப மனுவை வாங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாம். அவ்வாறு செய்யாதவர்களின் முக்கிய பதவிகள் மறு பரிசீலனை செய்யப்படும் என்று கூறப்பட்டதாம்.
இதனால் பதவிக்கு பங்கம் வந்து விடுமோ என்று பயந்து போன முக்கிய நிர்வாகிகள் பலர் சீட் வேண்டி தலைமைக்கு படையெடுத்து வருகின்றனர்.