பாசிச வெறி பிடித்த திமுக அரசு-வைகோ
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வைகோ பேசுகையில்,
பாசிச வெறி பிடித்த தமிழக அரசின் காவல்துறை பொய் வழக்கு தொடர்ந்து சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயலாகும்.
ஒரு நாஞ்சில் சம்பத்தை கைது செய்தால் ஓராயிரம் நாஞ்சில் சம்பத்துக்கள் உருவாவார்கள் என்பதை தமிழக அரசு மறந்து விடக்கூடாது.
இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்துவிட்டு ஈழத் தமிழர்களுக்கு மருந்துகளையும் அனுப்பி வருகிறது. இவ்வாறு இரட்டை வேடம் போட்டு துரோகம் செய்து வரும் மத்திய அரசையும் அதற்கு துணையாக இருக்கும் திமுக அரசையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழர்களுக்கு துரோகம் செய்து வரும் காங்கிரசுக்கும், அதற்கு துணை நிற்கும் திமுகவிற்கும் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார் வைகோ.