மாயாவதி பிரதமராக ஜெ. ஆட்சேபிக்க மாட்டார்: பரதன்
டெல்லி: மாயாவதி பிரதமர் பதவிக்கு வருவதற்கு ஜெயலலிதா ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் பதவிக்கு அத்வானி, மன்மோகன் சிங்கை விட பொருத்தமானவர், சரியானவர் மாயாவதிதான்.
லோக்சபா தேர்தலில் 3வது அணிக்கு பிரதமரை தேர்வு செய்யும் சக்தி கிடைத்தால், ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம். ஆனால் தற்போதைய தலைவர்களில் மாயாவதியே சாலப் பொருத்தமானவராக உள்ளார்.
அதேபோல, மாயாவதி பிரதமராக வருவதற்கு ஜெயலலிதா ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்.
பாஜகவுடன் மாயாவதிக்கு 3 முறை கசப்பான அனுபவம் கிடைத்துள்ளது. எனவே அவர் தேர்தலுக்குப் பின்னர் இடதுசாரிகளை உதறி விட்டு பாஜகவுக்கு செல்வார் என கருதவில்லை. தேசியவாத காங்கிரஸ், பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்.
பாஸ்வானுடன் ரெகுலராக நான் தொடர்பு வைத்துள்ளேன். நேற்று கூட எனக்கு மீன் அனுப்பி வைத்திருந்தார் பாஸ்வான். அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பர்.
அதேபோல ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் மிகவம் நல்ல மனிதர். நல்ல தலைவர். ஆனால் துரதிர்ஷ்டவசாக அவர் மறுபக்கத்தில் (பாஜக கூட்டணியில்) உள்ளார் என்றார் பரதன்.