கூட்டணி இழுபறி - திமுக நேர்காணல் ஏப்ரலுக்கு ஒத்திவைப்பு
சென்னை: கூட்டணி இன்னும் இறுதியாகாததால், திமுக நேர்காணல் ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப் போடப்பட்டு விட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு பாமகவும், தேமுதிகவும் இழுத்தடித்து வருவதால், திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்யமுடியாமல் குழம்பிப் போயுள்ளன.
பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் மறைமுகமாக, திமுக, அதிமுகவுடன் ஒரே நேரத்தில் பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் யாருடைய பேரம் படியப் போகிறது என்பது தெரியாமல் பெரும் குழப்பமாக உள்ளது.
இவர்களின் இந்த கூட்டணி பேரத்தை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார், யாருடன் சேருவார், என்ன மாதிரியான கூட்டணி அமையும் என்பதை அறிய ஆவலுடன் அவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் வருகிற 25ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேர்காணல் நடப்பதாக இருந்தது.
தற்போது இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி இறுதியாகாத நிலையில், நேர்காணல் நடத்த வேண்டாம் என்று கருதியே திமுக தலைமை நேர்காணலை தள்ளி வைத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர்கள் குறித்த நேர்காணல் 25.3.2009 முதல் என்றிருந்ததை, கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிவுற்ற பிறகு, திமுக போட்டியிடுகின்ற தொகுதிகளில் கட்சி வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை அறியும் வகையில், நேர்காணல் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 2ம் தேதிக்குள் திமுக கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் முடிவடையும் என இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.