ஐஓசியுடன் கை கோர்க்கும் ரிலையன்ஸ் - பெட்ரோல் நிலையங்கள் யாருக்கு?
மும்பை: ரிலையன்ஸ் நிறுவன பெட்ரோல் பங்குகளை நடத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) முன்வந்துள்ளது. இதற்காக ரிலையன்ஸுடன் பங்குதாரராக கை கோர்க்கிறது ரிலையன்ஸ்.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 1,432 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் பெட்ரோல், டீஸல் விலை அதிகமாக இருந்தது.
அரசுத் துறை பெட்ரோல் நிலையங்கள் மானிய விலையில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்வதால், இந்நிறுவனங்களில் விற்பனை குறைந்தது. இதனால் இந்நிறுவனங்கள் அனைத்தையும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் மூடியது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது சுத்திகரிப்பு ஆலையும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால், பெட்ரோல் நிலையங்களை தகுதியான நிறுவனங்களிடம் ஒப்படைக்க ரிலையன்ஸ் திட்டமிட்டது.
பெட்ரோல் நிலையங்களை ஏற்று நடத்துவது தொடர்பான டெண்டரை இரண்டு கட்டமாக ரிலையன்ஸ் நடத்துகிறது. அதில் விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களைப் பற்றிய தகவலைத் திரட்டி அதில் எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்வது என்பதை நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இறுதி செய்வார் எனத் தெரிகிறது.
ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்களை ஏற்று நடத்த ராயல் டச்சு ஷெல் நிறுவனமும் ஆர்வம் தெரிவித்துள்ளதாக இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வைத்துக் கொண்டு எஞ்சிய பங்குகளை ஐஓசி உள்ளிட்ட ஆர்வம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் ஐஓசியோ 50 சதவீத பங்குகளைக் கோருகிறது. இன்னும் ஓரிரு நாளில் இறுதி முடிவு தெரிந்துவிடும்.
ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையங்களை ஏற்று நடத்துவதன் மூலம் கூடுதலாக 20 லட்சம் டன் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications