புதுக்குடியிருப்பில் மகனுடன் இருக்கிறார் பிரபாகரன் - ராணுவம்
கொழும்பு: புதுக்குடியிருப்பு பகுதியில் மகன் சார்லஸுடன் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருப்பதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
பிரபாகரன் குறித்து இலங்கை ராணுவம் அவ்வப்போது செய்திகளைத் தந்து வருகிறது. முதலில் அவர் நாட்டை விட்டு தப்பி விட்டார் என்றார்கள். பின்னர் தப்பியிருக்க மாட்டார் என்றார்கள். பின்னர் ஆயிரக்கணக்கானோருடன் பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்று கதை விட்டனர்.
இப்போது புதுக்குடியிருப்பில் தனது மகன் சார்லஸுடன் பதுங்கு குழிகளுக்குள் இருக்கிறார் பிரபாகரன் என்று கூறியுள்ளது இலங்கை ராணுவம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தப்பி பாதுகாப்புப் பகுதிக்கு வந்த மக்களை மேற்கோள் காட்டி இலங்கை ராணுவம் தனது இணைய தளச் செய்தியில் இதை தெரிவித்துள்ளது.
புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளில் பிரபாகரனும், அவரது மகன் சார்லஸ் அந்தோனி சீலனும் உள்ளனர்.
அவ்வப்போது வெளியே வரும் அவர்கள், அரசை எதிர்த்துப் போராடுவதற்காக அப்பகுதியிலிருந்து தமிழர்கள் வெளியேறக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
பிரபாகரனும், அவரது மகனும் வெளியே வரும்போது ஆயுதம் தாங்கிய புலிகளின் பலத்த பாதுகாப்புடன்தான் வருகின்றனர்.
பிரபாகரன் இப்போதைக்கு இலங்கையை விட்டுச் செல்ல மாட்டார். அப்பாவி பொதுமக்களை வதைத்து ஒரு சூழ்நிலையை உருவாக்கி போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்துவார்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தேடப்படும் குற்றவாளி பிரபாகரன். எனவே, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றாலும் ஓராண்டுக்கு மேல் உயிருடன் இருக்க முடியாது எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications