பீகாரில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டி - லாலு அறிவிப்பு
டெல்லி: லாலு பிரசாத் யாதவ் - பாஸ்வான் கூட்டணிக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது. பீகாரில் அனைத்துத் தொகுதிகளிலும் ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி கூட்டணி போட்டியிடும் என லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
பீகாரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடைந்து போய் விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்களை மட்டுமே லாலு ஒதுக்கியதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
மாறாக, லாலுவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 37 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், லாலு போட்டியிடும் இரு தொகுதிகள் மற்றும் பாஸ்வான் போட்டியிடும் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடப் போவதில்லை என்றும் அது அறிவித்தது.
இந்த நிலையில் லாலு, காங்கிரஸ் இடையிலான மோதல் முற்றியுள்ளது. பீகாரில் அனைத்துத் தொகுதிகளிலும் (காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக அறிவித்த 3 தொகுதிகள் உள்பட) போட்டியிடுவோம் என லாலு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற அவுரங்காபாத், சஸ்ராம், மதுபானி ஆகிய தொகுதிகளிலும் நாங்கள் தற்போது போட்டியிடப் போகிறோம்.
இந்த தொகுதிகளில் எங்களது வேட்பாளர்களுக்கு லோக் ஜன சக்தி ஆதரவு அளிக்கும்.
ஜார்க்கண்டிலும் பாஸ்வானுடன் கூட்டணி..
அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்திலும் காங்கிரஸுடன் எங்களுக்கு உறவு இல்லை. அந்தத் தேர்தலை பாஸ்வானுடன் இணைந்து சந்திப்போம் என்றார் லாலு.
ஜார்க்கண்ட்டில், லாலு கட்சிக்கு இரு சீட்களை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கி பதிலடி கொடுத்தது. பாஸ்வானுக்கு ஒரு சீட் கூட அது ஒதுக்கவில்லை. இதனால் அங்கும் காங்கிரஸ், லாலு-பாஸ்வான் இடையே கூட்டணி உருவாகவில்லை.