கல்விக் கடன் ஏழைகளுக்காகவே -மதுரை உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை: திறன்வாய்ந்த ஏழை மாணவர்களுக்காகவே கல்விக்கடன் வழங்கப்படுகிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவர் ஹரிஷ் பாபு. இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தான் மேற்படிப்பு படிக்க விரும்புவதாகவும், அதற்கு, குடும்பத்தில் போதிய வசதி இல்லையென்றும் அதனால் வங்கிக் கடன் வேண்டி வங்கியை அனுகிய போது வங்கி, கல்விக் கடன் தர மறுத்து தனது மனுவை தள்ளுபடி செய்து விட்டதாகவும், எனவே தனக்கு கல்விக் கடன் வழங்க நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
தேர்வில் சராசரி மதிப்பெண்கள் பெற்று பயிற்சி கட்டணம் கட்ட வங்கி கடன் தர வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.
கல்வி கடன் ஏழைகளுக்கும், திறன் வாய்ந்த மாணவர்கள் பயன்பெறவுமே வழங்கப்படுகிறது.
வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டால், இந்த திட்டம் தோல்வி அடைந்து விடும்.
மனு தாக்கல் செய்தவர் தேர்வில் 70 சதவீத மதிப் பெண் பெற்றுள்ளார். அவரது பெற்றோர் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் பயிற்சி கட்டணம் செலுத்தக் கூடிய நிலையிலேயே உள்ளனர்.
வங்கி மேலாளர்கள் கல்விக்கடன் வழங்குவதில் உரிய முறைகளை பின்பற்றுகிறார்கள்.
மேலும் ரிசர்வ் வங்கி கல்விக் கடன் குறித்து, விடுத்துள்ள சுற்றறிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி நீதிபதி மாணவர் ஹரீஸ்பாபுவின் மனுவை தள்ளுபடி உத்தரவிட்டார்.