இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்து மரணம்
சிவகாசி: இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும், தேமுதிக - காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி அருகே உள்ள காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (60). இவர் ஒரு பெயின்டர். தீவிர காங்கிரஸ் தொண்டர். சந்திரா என்ற மனைவியும், பாபு, வெங்கடேசன் என்ற மகன்களும், சாந்தி, விஜயலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
நேற்று முன்தினம் இரவு காமராஜர்புரம் காலனி பகுதியில் கட்சி கொடிமரங்கள் இருக்கும் இடத்துக்கு வந்தார் மாரிமுத்து.
ஒரு கையில் கட்சிக் கொடியும், இன்னொரு கையில் மண்ணெண்ணை கேனும் வைத்திருந்தார். பின்னர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு, இலங்கை தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டார். பின்னர் தனக்குத் தானே தீவைத்துக் கொண்டார்.
பதறிப் போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் பலன் அளிக்காமல் நேற்று மாரிமுத்து மரணமடைந்தார்.
காங்.-திமுக-தேமுதிக கூட்டணி வேண்டும்...
தற்கொலை செய்துகொண்ட மாரிமுத்து ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதை குடும்பத்தினர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதில்,
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த். சோனியாகாந்தி, டாக்டர் கலைஞர் அவர்கள் இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும். விஜயகாந்த் அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியும் நடைபெற வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமைய வேண்டும் என்று மாரிமுத்து எழுதி வைத்துள்ளார்.