பிளஸ்டூ தேர்வு முடிந்தது - நாளை 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்
சென்னை: பிளஸ் டூ தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நாளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் தொடங்கின. இரு மாநிலங்களிலும் 7 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர். நேற்றுடன் இந்தத் தேர்வு முடிவடைந்தது. நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது.
தேர்வை வெற்றிகரமாக முடித்து விட்டு வெளியே வந்த மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் தேர்வு முடிந்ததைக் கொண்டாடினர். பலர் கலர் பொடிகளைத் தூவிக் கொண்டும், பட்டாசுகளை வெடித்தும், தண்ணீர் பாக்கெட்டுக்களால் முகத்தில் அடித்துக் கொண்டும் குஷியுடன் கொண்டாடினர்.
கடைசிப் பரீட்சையான உயிரியல், தாவரவியல் ஆகியவை மிகவும் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவியர் கூறினர்.
விடைத்தாள் திருத்தும் பணி இன்றே தொடங்குகிறது. மே முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி.
பிளஸ்டூ தேர்வு முடிந்து விட்டதைத் தொடர்ந்து நாளை பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி ஆகியவை கடந்த 18ம் தேதியே தொடங்கி விட்டன. நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்குகிறது. மொத்தம் 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ, மாணவியர் தேர்வை எழுதவுள்ளனர்.
தேர்வின்போது மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கி ஏப்ரல் 8ம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதவுள்ளனர். மொத்தம் 101 கைதிகள் நாளை தேர்வு எழுதுகின்றனர். அனைவரும் புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல கோவை சிறையிலும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.