For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

26ம் தேதி குமரியில் விஜயகாந்த் பிரசாரம்-தெளிவாக பேசுவாரா?

By Sridhar L
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. நான் யாரை கை காட்டுகிறேனோ அவர்களுக்கே வாக்களியுங்கள் என்று குழப்பமான விளக்கத்தைக் கொடுத்து காஞ்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், 26ம் தேதி தனது முழு வீச்சிலான பிரசாரத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். அன்று அவர் தனது நிலை குறித்து தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் தடாலடியாக பிரசாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த். கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பதை தேங்காய் உடைப்பது போல உடைத்து பேசுவார் என தொண்டர்கள் பெரும் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் யாருக்கும் புரியாத வகையில், மக்கள், தெய்வத்துடன்தான் கூட்டணி. நான் அடையாளம் காட்டுவோருக்கு வாக்களியுங்கள் என்று கூறி விட்டுப் போய் விட்டார் கேப்டன்.

இதனால் தேமுதிகவினர் மட்டுமல்லாது பொதுமக்களும் கூட குழம்பிப் போயுள்ளனர். என்ன சொல்ல வருகிறார் விஜயகாந்த் என்று யாருக்கும் இதுவரை தெளிவாகப் புரியவில்லை.

ஆனால் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவது என்னவென்றால், காங்கிரஸுக்கு மறைமுகமாக ஆதரவு தரப் போகிறார் விஜயகாந்த். குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே தேமுதிக போட்டியிடும். பிற தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்குமாறு தனது கட்சியினரை அவர் கேட்டுக் கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 26ம் தேதி கன்னியாகுமரியில் தனது தேர்தல் பிரசாரத்தை முழுமையாக ஆரம்பிக்கிறார் விஜயகாந்த். அப்போதாவது அவர் தனது நிலையை தெளிவாகா கூறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது.

மொத்தம் 2267 பேர் மனு அளித்துள்ளனர். முதற்கட்ட வேட்பாளர் தேர்வு சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது.

முதற்கட்டமாக நேற்று வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கடலூர், புதுச்சேரி ஆகிய 14 தொகுதிகளுக்கு மனு செய்திருந்த 352 பேர் கலந்துகொண்டனர். இதில், 20 பேர் பெண்கள் ஆவர்.

போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர், அந்த தொகுதியில் மக்கள் மத்தியில் எந்தவகையில் பிரபலம், எவ்வளவு செலவு செய்வார், கட்சியின் எந்த ஒரு முடிவுக்கும் கட்டுப்படுவார்களா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

வேட்பாளர் நேர்காணல் இன்றும் நடந்தது. நாளையும் தொடர்ந்து நடக்கிறது. அதன் பின்னர் பிரசாரத்திற்குக் கிளம்புகிறார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X