ரயில்களில் 'சைட் மிடில் பெர்த்' அகற்றப்படுகிறது!
சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்களில் அமைக்கப்பட்ட பக்கவாட்டு படுக்கை வசதி, பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளதால், படிப்படியாக அவை அகற்றப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றுவதற்காக தற்போது உள்ள கீழ், மேல், நடு, பக்கவாட்டு கீ்ழ் மற்றும் மேல் படுக்கை வசதிகளுடன் சேர்த்து, புதிதாக பக்கவாட்டு நடு படுக்கை வசதியை அறிமுகப்படுத்தியது ரயில்வே.
இதனால் பயணிகள் சொல்லொணாத் துயரத்தை சந்தித்தனர். பக்கவாட்டு கீழ் படுக்கை வசதியைப் பெற்றவர்களால் உட்காரக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.
பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த பக்கவாட்டு நடு படுக்கை வசதியை நீக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து இந்த படுக்கை வசதி நீக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியிருந்தார். ஆனாலும் இதுவரை அது நீக்கப்படவில்லை.
இதுகுறித்து வேலு கூறுகையில், ஏ.சி. 3-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி மற்றும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் பக்கவாட்டு நடுப்படுக்கை புதிதாக போடப்பட்டது. இது பயணிகளுக்கு இடையூறாகவும் அசவுகரியமாகவும் இருப்பதாக புகார் வந்தன.
இதனால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லா பெட்டிகளிலும் உடனே அகற்றி விட இயலாது. படிப் படியாக பக்க வாட்டு நடுப்படுக்கைகள் அகற்றப்படும்.
தற்போது இந்த படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. எனவே அவற்றை எடுப்பது சிரமமாகும். அந்த ரயில்கள் ஒர்க்ஷாப்புக்குப் போகும்போது பக்கவாட்டு நடுப் படுக்கை வசதி நீக்கப்படும். விரைவிலேயே அனைத்து நடுப் படுக்கை வசதிகளும் நீக்கப்பட்டு விடும் என்றார் வேலு.