தொகுதிப் பங்கீடு: திமுகவுக்கு 22-காங்கிரசுக்கு 15?!
சென்னை: கூட்டணியில் பாமக, தேமுதிக சேராவிட்டால் புதுவையையும் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 15 இடங்களையும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளையும் ஒதுக்கிவிட்டு 22 இடங்களில் திமுக போட்டியிடும் என்று தெரிகிறது.
காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் திமுக இன்னும் தொகுதி உடன்பாட்டை எட்டவில்லை.
தேமுதிக, பாமகவின் நிலைக்காக அந்தக் கட்சி காத்திருந்தது. இப்போது பாமக, அதிமுக கூட்டணிக்குப் போகவும், தேமுதிக தனித்து நிற்கவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை திமுக வேகப்படுத்திவிட்டது.
இதன் ஒரு கட்டமாகவே திருமாவளவனை அழைத்துப் பேசினார் முதல்வர் கருணாநிதி. அப்போது திருமாவளவன் 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரினார். ஆனால், அவருக்கு ஒரே தொகுதியாக கடலூர் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி ஏற்கனவே திமுகவுடன் பேச்சு நடத்தி வருகிறது. அந்தக் கட்சியும் 3 தொகுதிகளைக் கேட்டுள்ளது. இந்தக் கட்சிக்கும் ஒரு தொகுதியே ஒதுக்கப்படலாம்.
அதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் 2 தொகுதிகளைக் கேட்கிறது. இந்தக் கட்சிக்கும் ஒரு தொகுதியை மட்டுமே திமுக ஒதுக்கவுள்ளது. கடந்த முறையைப் போலவே திமுக சின்னத்தில் போட்டியிடுமாறு இந்தக் கட்சியிடம் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் போக மீதமுள்ள 37 இடங்களில் புதுச்சேரி உள்ளிட்ட 15 தொகுதிகளை காங்கிரசுக்குத் தரவும், மற்ற 22 இடங்களிலும் திமுகவே போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.
திமுக நேர்காணல் ஒத்தி வைப்பு:
இதற்கிடையே பாமக, தேமுதிகவிடம் தொடர்ந்து பேசி வருவதால் அவசரப்பட வேண்டாம் என்று திமுகவுக்கு காங்கிரஸ் தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் முதல்வர் கருணாநிதி இன்று நடத்துவதாக இருந்த நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இந்த நேர்காணல் வரும் ஏப்ரல் 2ம் தேதி நடக்கவுள்ளது.