பொய் பேசும் பிரதமரால் அவமானம்-வைகோ
டெல்லி: இலங்கையில் போரை நிறுத்துங்கள் என்று இதுவரை ராஜபக்சேவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதே இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
டெல்லியில் ஜெர்மன் தூதரகத்தின் அரசியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எரிக் கோசைல், சுவீடன் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஆஸ்கார் ஸ்கைட்டர் ஆகியோரை வைகோ சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
மத்தியில் வாஜ்பாய் அரசு இருந்தபோது இலங்கைக்கு ஆயுதங்களையோ, ராணுவத்தையோ அனுப்பவில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகாலம் இந்த நிலை நீடித்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்தபோது தான் இலங்கைக்கு ராணுவ உதவிகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் அரசு தமிழ் மக்களுக்கு கெடுதல் விளைவித்துள்ளது.
அவர்களின் இந்த துரோகம் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும். போரை நிறுத்துங்கள் என்று இதுவரை ராஜபக்சேவிடம், பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியதே இல்லை. ஆனால் இதுகுறித்து பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது.
இலங்கையில் செத்து விழும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இந்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று இந்திய அரசு எங்களை வற்புறுத்தவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேசி வருவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் இந்த நிமிடம் வரை இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை.
வீரமானவர்கள் என்றால் கள்ளத் தோணியில் செல்லுங்கள் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். அவசியம் இருந்தால் ஈழத் தமிழர்களை காக்க செல்வோம். முதல்வர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசலாமா?.
வரும் தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்.
இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த போது, அதை காலம் கடந்த முயற்சி என்றாலும், பாராட்டத்தக்கது என்று முன்பு சொன்ன திருமாவளவன் தற்போது அதை நாடகம் என்று சொல்லியிருக்கிறார். தான் வகிக்கும் கூட்டணி நிர்ப்பந்தத்தால் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தக்க வைத்துக்கொள்ள இலங்கை தமிழர்களை முதல்வர் கைகழுவி விட்டார் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது.
மதிமுகவின் 18வது பொதுக்குழுக் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி கூடுகிறது. சென்னை அண்ணாநகர், 3வது அவென்யூ, நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜயஸ்ரீ மகாலில் இக் கூட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications