திமுக பாணியில் கிலோ அரிசி ரூ.2-பாஜக திட்டம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக அறிவித்த கிலோ அரிசி 2 ரூபாய் என்ற திட்டத்தைப் போலவே தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட பாஜக யோசித்து வருகிறதாம்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் அதில் இடம் பெற்றிருந்த ஏராளமான இலவசங்கள்.
கலர் டிவி, இலவச காஸ் அடுப்பு, இணைப்பு கிலோ அரிசி ரூ. 2 என்ற திட்டங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன. திமுக கூட்டணி ஆட்சிக்கு வர அது உதவியது.
இப்போது இதே பாணியில் பல மாநிலங்களிலும் அறிவிக்க ஆரம்பித்து விட்டனர். தேர்தல் ஆயுதமாக இந்த இலவசங்கள் மாறியுள்ளன.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் கூட கிலோ அரிசி 3 ரூபாய்க்கு தரப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
மேலும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை-எளிய மக்கள் மாதம் 25 கிலோ அரிசி பெறும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சோனியா தெரிவித்தார்.
இந்த அரிசி இப்போது அரசியலாகி விட்டது. காங்கிரஸைப் போலவே தானும் ஏதாவது ஒரு அரிசி வாக்குறுதியை அளித்து ஏழைகளை கவர் செய்ய பாஜக நினைக்கிறதாம்.
திமுக அரசு ஆரம்பத்தில் கொடுத்தது போல (இப்போது கிலோ அரிசி ஒரு ரூபாய்தான்) கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு தருவோம் என வாக்குறுதி அளிக்க பாஜக தீர்மானித்துள்ளதாம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது கிலோ அரிசி 2 ரூபாய் என்ற வாக்குறுதியை அளித்தது பாஜக. அது வாக்காளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. பாஜகவுக்கு வெற்றியையும் தேடித் தந்தது.
சட்டீஸ்கரில் பெற்ற வெற்றியை நாடு முழுவதும் விஸ்தரிக்க விரும்புகிறதாம் பாஜக.