திருப்பதி தொகுதியில் சிரஞ்சீவி ஏப்.4ல் வேட்பு மனு
ஹைதராபாத்: ஆந்திர சட்டசபைத் தேர்தலி்ல் திருப்பதி தொகுதியில் மெகா ஸ்டாரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி போட்டியிடுகிறார். ஏப்ரல் 4ம் தேதி வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் லோக்சபாவுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது. அதேபோல சிரஞ்சீவியும் விஜயகாந்த் ஸ்டைலி்ல் யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக நிற்கிறார்.
மறுபக்கம், தெலுங்கு தேசம் கட்சி மெகா கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளது. இக்கூட்டணியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, இடதுசாரிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இன்னொரு முனையில் பாஜக தனியாக போட்டியிடுகிறது.
தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியத்திற்கு இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்குதேசம், காங்கிரஸுக்கு பெரும் சவாலாக விளங்குகிறார் சிரஞ்சீவி.
சட்டசபைத் தேர்தலில் அவர் திருப்பம் தரும் திருப்பதியில் போட்டியிடுகிறார். இங்கு அவர் ஏப்ரல் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதையொட்டி திருப்பதியில் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தொண்டர்கள் சிறப்பு வரவேற்புக்கு ஏர்பாடு செய்துள்ளனர்.
பக்கத்து தொகுதியான சந்திகிரியில் நடிகை ரோஜா தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.