திருச்சியில் வலைவீசும் திமுக-மாயமாகும் மதிமுக
திருச்சி: திருச்சி மதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை திமுக தொடர்ந்து தன்வசம் இழுத்து வருகிறது. இதனால் திருச்சியில் மதிமுகவின் பலம் குன்றி வருவதாக தெரிகிறது.
சமீபகாலமாக மதிமுகவின் முக்கிய உறுப்பினர்கள் பலர் திமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். எல் கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் என இரண்டு மதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ கண்ணப்பன் ஆகியோர் திமுகவில் சேர்ந்தனர். இவர்களை தொடர்ந்து பல ஆயிரம் மதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீரங்கம் 2வது வார்டு மாநகராட்சி மதிமுக கவுன்சிலர் ரெங்கா ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மதிமுகவினர் அமைச்சர் நேருவை சந்தித்து திமுகவில் சேர்ந்தனர்.
இவர்களை தொடர்ந்து நேற்று திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ராஜாமுகமது தலைமையில் 500 மதிமுகவினர் அமைச்சர் நேருவுக்கு பொன்னாடை அணிவித்து திமுகவில் இணைந்தனர். அப்போது நேரு பேசுகையில், இளைஞர்கள் திமுகவில் இணைவதை வரவேற்கிறேன் என்றார்.
இதையடுத்து மேலும் சில திருச்சி மதிமுகவினர் கட்சி மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் மதிமுகவை உடைக்க முயற்சிப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
மதிமுக புடம் போட்ட தங்கம்...
இதனால் மதிமகு மாவட்ட செயலாளர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மலர்மன்னன் கூறுகையில்,
மதிமுகவை யாரும் உடைக்க முடியாது. தற்போது திமுகவில் சேர்ந்தவர்களில் பலர் ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தான். மற்றவர்கள் எங்கள் கட்சி உறுப்பினர்கள் கூட கிடையாது. யார்- யாரையெல்லாமே சேர்த்துக் கொண்டு மதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்கிறார்கள்.
திமுகவில் சேறுகிறவர்கள் கடலில் கலந்த பெருங்காயமாக கரைந்து போவார்கள். மதிமுக எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்து புடம் போட்ட தங்கம் போல ஜொலிக்கும் கட்சி. எதிர்காலம் அதை நிரூபிக்கும் என்றார் மலர் மன்னன்.












Click it and Unblock the Notifications