குழப்பியெடுக்கும் விஜய்காந்த்- சரத்குமார் தாக்கு
மதுரை: கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் குழப்பமாக பேசி வருகிறார். முதல்நாள் கூட்டணி இல்லை என்கிறார். மறுநாள் தனித்து போட்டி என்கிறார். அடுத்த நாள் நான் யாரை கை காட்டுகிறேனோ அவருக்கு வாக்களியுங்கள் என்கிறார். புரியாதவர்போல் பேசும் விஜயகாந்த் பற்றி பேச ஒன்றும் இல்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவும், தென் மாவட்டங்களி்ல் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் மனுக்கள் பெறவும் சரத்குமார் மதுரை வந்தார். தெப்பக்குளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது 52 பேர் சரத்குமாரிடம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை கொடுத்தனர். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. ஒரு வாரத்திற்குள் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு எங்களுக்கு எத்தனை தொகுதிகள், எந்த தொகுதிகள் என்று முடிவு செய்யப்படும். எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம் பெறும்.
அப்போது வலிமை பெற்ற கூட்டணியாக இது அமையும். எங்கள் அணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தரமாக தீர்த்து வைப்போம்.
விஜயகாந்த் முன்னாள் நடிகர் சங்கத் தலைவர், எனக்கு முன்பே நடிக்க வந்தவர். நல்ல நண்பர். தேர்தல் கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் குழப்பமாக பேசி வருகிறார். முதல்நாள் கூட்டணி இல்லை என்று கூறுகிறார். மறுநாள் தனித்து போட்டி என்கிறார். அடுத்த நாள் நான் யாரை கை காட்டுகிறேனோ அவருக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறார். புரியாதவர்போல் பேசும் விஜயகாந்த் பற்றி பேச ஒன்றும் இல்லை.
சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை முற்போக்கு சிந்தனையுடன் இருக்கும். பெண்கள் முன்னேற்றம், சமச்சீர் கல்வி, கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் அதில் தீர்வு இருக்கும். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,000 வழங்குவோம் என்றார்.