நாளை திமுக-காங் தொகுதிப் பங்கீடு பேச்சு
தமிழகத்தி்ல் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தேமுதிக, பாஜக கூட்டணி என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய தேசிய முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசிய லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் சேரலாம் எனத் தெரிகிறது.
ஆரம்பத்தில் காங்கிரஸ் மற்றும் மனித நேய மக்கள் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக பேச்சு நடத்தியது. ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து கூட்டணிகள் உறுதியாகும் வகை இடப் பகிர்வு பேச்சை ஒத்திப் போட்டது திமுக.
இப்போது கூட்டணிகள் தெளிவாகிவிட்டதால் தனது அணியில் உள்ள கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை துவக்கவுள்ளது.
காங்கிரசுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினரும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் பேச்சு நடத்தவுள்ளனர்.
தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுமே இறுதி முடிவெடுக்கவுள்ளனர். ஆனாலும் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாளைய கூட்டத்தி்ல் பேசப்படவுள்ளது.
கடந்த முறை திமுக 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதியிலும் போட்டியிட்டு வென்றன.
இம் முறை கூட்டணியில் பெரிய கட்சிகள் ஏதும் இல்லாத நிலையில் காங்கிரஸ் 16 தொகுதிகளைக் கேட்கிறது.
காங்கிரசுடன் பேச்சு நடத்திய பின் பிற கட்சிகளுடன் திமுக குழு அடுத்தடுத்து பேச்சு நடத்தவுள்ளது.