பாமக தேர்தல் அறிக்கையில் தனி ஈழம்
சென்னை: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக பாமக பாடுபடும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் மொத்தம் 44 தலைப்புகளில் திட்டங்கள், கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க அங்கு தமிழர்களுக்கு தனி நாடு அமைவது தான் ஒரே வழி. அதை உருவாக்க பாடுபடுவோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது கடமையை ஆற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.
கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.
அரசியல் கிரிமினல்மயமாவதைத் தடுக்கவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்கவும், தேர்தல் செலவுகளைக் குறைக்கவும், தேர்தல்கள் நேர்மையாக நடக்கவும் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வர பாமக பாடுபடும்.
இடைத் தேர்தல்கள் நடத்தப்படும் நிலை ஏற்பட்டால் அதைத் தவிர்த்து அந்தத் தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற கட்சியின் சார்பி்ல் பரிந்துரைக்கப்படும் நபரையே மீதமுள்ள காலத்திற்கு அந்தத் தொகுதி மக்களின் பிரதிநிதியாக ஏற்றும் கொள்ளும் முறையை பாமக கொண்டு வரும்.
மது, புகையிழையை ஒழிக்கப் பாடுபடுவோம்.
தொழிலாளர் நலனைப் பாதுகாப்போம்.
நாட்டை சிறப்பாக ஆளும் வகையில் மாநிலங்களைப் பிரித்து சிறியதாக 50 மாநிலங்களை உருவாக்க மத்திய அரசை நெருக்குவோம்.
இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் நீக்கப்படும்
வேலைவாய்பின்மையைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறப்பட்டுள்ளது.