3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைதேர்தல் எப்போ?
சென்னை: 2 மதிமுக மற்றும் ஒரு திமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதால் காலியான 3 சட்டசபைத் தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
மேலும், மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகரும் விரைவில் ராஜினாமா செய்யப் போவதால் அதற்கும் சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறும்.
தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மு.கண்ணப்பன். இதேபோல கம்பம் தொகுதி மதிமுக உறுப்பினர் ராமகிருஷ்ணன். இளையாங்குடி தொகுதியிலிருந்து திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ கண்ணப்பன்.
இந்த மூன்று பேரும் தத்தமது கட்சியிலிருந்தும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகி விட்டனர். 3 பேரின் ராஜினாமா கடிதங்களையும் சபாநாயகர் ஆவுடையப்பன் ஏற்றுக் கொண்டு விட்டார். இதனால் 3 தொகுதிகளும் காலியாகி விட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மங்களூர் (தனி) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வம், அக்கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராகி விட்டார். ஆனால் இதுவரை எம்.எல்.ஏ பதவியிலிருந்து அவர் விலகவில்லை. இதனால் அந்தத் தொகுதி இதுவரை காலியாகவில்லை.
விரைவில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் எஸ்.வி.சேகரும் ராஜினாமா செய்யவுள்ளார். இதனால் இதுவும் காலியாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள 3 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தியாக வேண்டும்.
ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதால் இப்போது இந்தத் தொகுதிகுக்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர்தான் இங்கு இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications