வன்னயில் நேற்று 14 சிறார்கள் உள்பட 51 தமிழர்கள் படுகொலை
முல்லைத்தீவு: வன்னிப் பகுதியில் நேற்று இலங்கைப் படைகள் நடத்திய தாக்குதலில் 14 சிறார்கள் உள்பட 51 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மாத்தளன் கடற்கரைக்கு சனிக்கிழமை வந்த 'கிறீன் ஒசன்' கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியுள்ளன. இதில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான பிரதிநிதி உள்பட இருவர் உயிர் தப்பினர்.
அதேபோல மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி நேற்றும் சிறிலங்கா படையினர் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 14 சிறுவர்களும் 5 மாத கர்ப்பிணிப் பெண்ணும் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் உட்பட 51 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.