போர் நிறுத்தம்-இலங்கை அரசு நிபந்தனை
கொழும்பு: இலங்கையில் நடந்து போரை நிறுத்த வேண்டுமானால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை விடுதலை புலிகள் உடனடியாக வெளியேற்றி, அவர்களை அரசின் பாதுகாப்பு பகுதிக்குள் வர அனுமதி வேண்டும் என இலங்கை அரசு நிபந்தனை விதித்துள்ளது.
ஈழத்தில் போர் பகுதியில் சுமார் 1.9 லட்சம் அப்பாவி தமிழர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். அவர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு பகுதிக்குள் நுழைய மறுத்து வருகின்றனர். இதற்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு பகுதிகளில் குண்டு வீசி தாக்கி வருவதே காரணம என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இலங்கை வந்த ஐநா மனித விவகார அமைப்பு இணை செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ், அப்பாவி மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஈழப் பகுதியில் உயிருக்கு போராடி வரும் தமிழர்களை காப்பாற்ற போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியனர். இதை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசுகள் இலங்கையிடம் போர் நிறுத்தும் குறித்து வலியுறுத்தியது.
இதனையடுத்து போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ளது. ஆனால் முக்கிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. இலங்கை வெளியுறவுத் துறை செயலர் பாலிகக்காரா கூறுகையில்,
விடுதலை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை பாதுகாப்பு பகுதிக்கு செல்ல அனுமதி கொடுத்தால் தற்காலிகமாக போரை நிறுத்தத்துக்கு இலங்கை அரசு தயாராக இருக்கிறது. இதை நீங்கள் தற்காலிக போர் நிறுத்தம் என்று அழைத்தாலும் சரி, அல்லது ஏற்கனவே இலங்கை அரசு விடுதலைப்புலிகளுக்கு அளித்த 48 மணி நேர கெடுவாக எடுத்துக் கொண்டாலும் சரி.
ஆனால், விடுதலைப்புலிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை வெளியேற விடுவதில்லை என்பதுதான் பிரச்சினையே. அவர்களை விடுதலைப்புலிகள் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.
மேலும், விடுதலைப்புலிகள்தான் பாதுகாப்பு வளைய பகுதியில் இருந்தவாறு ராணுவத்தினரை நோக்கி தாக்குதல் நடத்துகிறார்கள். அப்போது எதிர் தாக்குதல் மட்டுமே நடத்தப்படுகிறது. மற்றபடி ராணுவம் வேண்டுமென்று தாக்குதல் நடத்துவதில்லை என்றார் பாலிகக்காரா.
ராணுவ தாக்குதல் குறைக்கப்பட்டுள்ளது...
இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில்,
சண்டை நடக்கும் பகுதியில் சீருடை அணியாத விடுதலைப்புலிகள் பொதுமக்களுடன் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறார்கள். அதனால் எதிர்தாக்குதல் நடத்தும்போது, பொதுமக்களில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை யாராலும் உறுதி செய்ய முடியாது.
எனினும், போரின்போது எந்த அப்பாவி மக்களும் பலியாகவோ, காயமடையவோ கூடாது என்று ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனால்தான் கடந்த சில வாரங்களாக ராணுவம் தனது நடவடிக்கையை மெதுவாக்கி கொண்டுள்ளது.
போர் பகுதியில் உணவு, மருந்து வினியோகத்தை விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயுதமாக நாங்கள் பயன்படுத்தவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதனால் தான் தற்போது ராணுவத்தினர் தங்களது தாக்குதல்களை குறைத்து கொண்டிருக்கிறார்கள்.
அனேகமாக, தீவிரவாத குழுவுக்கு உணவு வினியோகம் செய்யும் ஒரே நாடாக இலங்கைதான் இருக்கும் என்று கருதுகிறேன்என்றார் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications