அதிமுக கூட்டணி: மதிமுக தொகுதிப் பங்கீடு இழுபறி
அதிமுகவுடன் மதிமுக 3 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்ட நிலையிலும் தொகுதிப் பங்கீடு நடக்கவில்லை.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக இம்முறை 5 தொகுதிகள் கேட்டது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புக் கொண்ட நிலையில் தான் திடீரென பாமகவும் உள்ளே வந்தது.
7 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் என்ற நிபந்தனையோடு வந்த ராமதாஸ் தனக்கு வேண்டியதை தனது பாணியில் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஈகோ பிரச்சனையாகிவிட்டது. இதனால் ராஜ்யசபா சீட் தராவிட்டாலும் பரவாயில்லை பாமக இணையாக 7 சீட்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், இதை ஏற்க ஜெயலலிதா தயாராக இல்லை. இதனால் தொகுதிப் பஙகீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதிமுகவை சமாதானப்படுத்த அதிகபட்சம் 6 தொகுதிகள் வரை ஜெயலலிதா தருவார் என்று தெரிகிறது.
நேற்று பேச்சு நடத்திவிட்டு வந்த வைகோ, பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்துகொண்டு இருக்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்று மட்டும் கூறிவிட்டுப் போய் விட்டார்.
இந் நிலையில் இன்று மீண்டும் பேச்சு நடக்கிறது. இதில் இறுதி முடிவு எட்டப்பட்டு தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.