தேர்தலுக்குப் பின் பாஜக ஆட்சியமைத்தால் மாநில கட்சிகள் வரும்-அத்வானி

அத்வானி தற்போது ஜார்க்கண்ட் மாநி்லத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தன்பாத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சி பக்கவாத நோயால் அவதிப்படுகிறது. நான் ஜார்க்கண்டில், தும்கா, ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், லோகர்தாக, தன்பாத் என பல ஊர்களில் பிரச்சாரம் செய்துவிட்டேன்.
ஆனால், காங்கிரஸ் சார்பில் சோனியாவோ, மன்மோகனோ இங்கு பிரச்சாரத்துக்கு வரவில்லை. காங்கிரசார் இங்கு பொதுகூட்டத்துக்கு கூட முயற்சிக்கவில்லை. அவர்களுக்கு இங்கு மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் பாகிஸ்தான் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அதிகம் அனுப்பியுள்ளது. இது ஏன் என்பதை அறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது.
அப்சலுக்கு தண்டனை ஏன் நிறைவேற்றப்படவில்லை...?:
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குரு மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2001ல் நடந்தது. 2002ல் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது நாம் 2009ல் இருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் அப்சல் குருவுக்கு எந்த தண்டனையும் வழங்காமல் வைத்திருக்கிறது.
ஆனால் இதுவே ஆனந்த் சிங் அல்லது ஆனந்த் மோகனாக இருந்தால் உடனே தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்திரா காந்தியை கொன்றவர்களை தூக்கில் போட்டுவிட்டனர். ஆனால் அப்சல் குருவை இன்னும் தூக்கில் போடவில்லை.
வெளிநாட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை வெளிகொண்டு வந்தால் அதன்மூலம் நாட்டில் குடிநீர் பஞ்சத்தை போக்க முடியும், இந்தியாவில் இருக்கும் 6 லட்சம் கிராமப்புற பள்ளிகளை கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
வருண் காந்தி கைது செய்யப்பட்டதில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது. இதில் உ.பி அரசுக்கு அதிக பங்கு உள்ளது என்றார் அத்வானி.
இதற்கிடையே டெல்லியில் தொலைக்காட்சிக்கு அவர் அளி்த்த ஒரு பேட்டியில்,
பாஜக கூட்டணியோ அல்லது காங்கிரஸ் கூட்டணியோ 3வது அணி பற்றி சிந்திக்கவில்லை. 3வது அணியில் உள்ள இடதுசாரிகள், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீரிய சமிதி, பிஜூ ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்களது மாநிலங்களிலும் காங்கிரசுக்கு எதிராக வலுவாக உள்ளன.
தேர்தலுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதை மாநில கட்சிகள் விரும்பவில்லை. முஸ்லிம்களின் ஓட்டுகள் கிடைக்காது என்ற பயம் உள்ளது. ஆனால் எங்கள் கூட்டணியில் சேர்ந்தாலும் ஐக்கிய ஜனதா தளம் முஸ்லிம்களின் ஓட்டுக்களை இழந்ததில்லை.
தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை உருவானால் மாநில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும். எந்த கட்சிகள் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications