கோவை மில் அதிபர் வீட்டில் ரூ. 25 லட்சம் கொள்ளை
கோவை: கோவையில் நள்ளிரவில் மில் அதிபருக்கு வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று கத்தி முனையில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே ராமசாமி (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஸ்பின்னிங் மில் வைத்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ஜெபமணி (52). இவர்களுக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். நந்தகுமாரின் மனைவி சமீபத்தில் தான் பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ராமசாமி தனது குடுமபத்தாருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் அவரது வீட்டின் முன் கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய 8 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்த 5 பேர் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் ராமசாமி, அவரது மனைவி மற்றும் மகனை ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி, பீரோ சாவியை வாங்கியுள்ளனர். பின்னர் அதிலிருந்த 100 பவுன் தங்க நகை, ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை அள்ளி சென்றுவிட்டனர்.
கொள்ளை முயற்சியை தடுக்க முயன்ற ராமசாமியின் செல்போனை உடைத்தனர். மேலும் வீட்டிலிருந்த செல்போன்கள் அனைத்தையும் பறித்து கொண்டு, காரில் ஏறி காற்றாக பறந்துவிட்டனர்.
இதையடுத்து போலீசுக்கு புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய், கை ரேகை நிபுணர் சகிதம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் மில் அதிபர் ராமசாமி கூறுகையில், கொள்ளையர்களுக்கு 25 முதல் 30 வயதுக்குள் தான் இருக்கும். அவர்கள் அனைவரும் லுங்கி அணிந்திருந்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications