6ம் தேதி முடிவெடுக்கிறதாம் புதிய நீதிக் கட்சி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது கட்சியின் நிலை என்ன என்பது குறித்து ஏப்ரல் 6ம் தேதி முடிவெடுக்கவிருப்பதாக புதிய நீதிக் கட்சி கூறியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தோன்றிய ஜாதிக் கட்சி புதிய நீதிக் கட்சி.
இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இன்னும் அது முடிவு செய்யவில்லை. காரணம், அதை யாரும் கூப்பிடவில்லை.
இந்த நிலையில் தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து ஏப்ரல் 6ம் தேதி அக்கட்சி முடிவு செய்யவுள்ளதாம்.
அவசர ஆலோசனை...
இதுகுறித்து புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாராளுமன்ற தேர்தலில், புதிய நீதிக்கட்சி போட்டியிடுவது குறித்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை அறிந்துகொள்வதற்காக ஏப்ரல் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் அவசர ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.
நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல், ஓட்டன் சத்திரம், கொடைக்கானல், சிவகங்கை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கோபி, நாமக்கல் (வெண்ணந்தூர்), வெள்ளக்கோவில், புதுவை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகை, ஜெயங்கொண்டம் (அரியலூர்), குடியாத்தம், வாணியம்பாடி, வேலூர், ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை, திருவள்ளூர், பொன்னேரி, திருப்போரூர், செங்கல்பட்டு, சென்னை, திருத்தணி, காஞ்சீபுரம், ஆற்காடு, சோளிங்கர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள்.
இதன் அடிப்படையில் ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இக்கட்சி முடிவு செய்யும் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications