ஜெட் மீது வழக்கு தொடர்ந்தது சஹாரா!
மும்பை: தங்களுக்கு தரவேண்டிய ரூ.1,450 கோடியை தராமல் இழுத்தடிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது மும்பை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சஹாரா குழுமம்.
ஏர் சஹாரா விமான நிறுவனத்தை சில ஆண்டுகள் முன்பு வரை நடத்தி வந்து சஹாரா குழுமம். இந்த விமான நிறுவனத்தை ரூ.1450 கோடி ரூபாய்க்கு 2007-ல் வாங்கியது ஜெட் ஏர்வேஸ்.
இந்தத் தொகையை முதல்கட்டமாக ரூ.900 கோடியும், மீதிப் பணத்தை ரூ.137.5 கோடி ஆண்டு தவணையாக 4 ஆண்டுகளிலும் செலுத்த வேண்டும் என்பது விற்பனை ஒப்பந்தம்.
ஆனால் ஒப்பந்தப்படி பணம் செலுத்தாமல் இழுத்தடிப்பதாக ஜெட் ஏர்வேஸ் மீது சஹாரா நிறுவனம் புகார் கூறி வந்தது. இது தொடர்பாக இருநிறுவனங்களுக்கும் மோதல் எழுந்தது.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்துக்கு தரவேண்டிய ரூ.1450 கோடி ரூபாயைத் தராமல் இழுத்தடிக்கும் ஜெட் ஏர்வேஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சஹாரா நிறுவனம் சில தினங்களுக்கு முன் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜெட் மீது சஹாரா வழக்குத் தொடர்ந்துள்ளதை உறுதிப்படுத்திய அந்நிறுவன செய்தித் தொடர்பாளர், விரைவில் முழு விவரமும் மீடியாவுக்கு தரப்படும் என்றார். ஆனால் ஜெட் நிறுவன அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications