சத்தியமூர்த்தி பவனில் குமரி காங்கிரசார் கலாட்டா
சென்னை: கன்னியாகுமரி தொகுதியை திமுகவிடமிருந்து பெற வேண்டும் என்று கோரி குமரி மாவட்ட காங்கிரஸார் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கொடியை அவர்கள் அரைக் கம்பத்தில் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. பழைய நாகர்கோவில் தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் வசம் இருந்து வந்தது. எனவே கன்னியாகுமரி தொகுதியும் நமக்கே கிடைக்கும் என இருந்து வந்தனர்அம்மாவட்ட காங்கிரஸார்.
ஆனால் அப்படி கொடுக்காமல் திமுக தானே இதை வைத்துக் கொண்டதால் காங்கிரஸார் கடும் கோபமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் அங்கு கருப்புக் கொடி ஏற்றுதல், தலைவர்களின் படங்களை எரித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெயபால் மற்றும் ஜான் ஜேக்கப் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், 24 மணி நேரத்திற்குள் கன்னியாகுமரியை காங்கிரஸ் கேட்டுப் பெற வேண்டும் எனவும் அறிவித்தனர்.
மேலும், இன்று சத்தியமூர்த்தி பவனில் குமரி மாவட்ட காங்கிரஸார் பிரமாண்ட போராட்டத்தையும் நடத்துவார்கள் என எச்சரித்திருந்தனர்.
அதன்படி இன்று ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட காங்கிரஸார் சத்தியமூர்த்தி பவனில் திரண்டனர்.
அங்கு கட்டப்பட்டிருந்த காங்கிரஸ் கொடியை கீழிறக்கி அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர். மேலும் கருப்புக் கொடியும் ஏற்றி கோபமாக திமுகவை எதிர்த்து கோஷமிட்டனர்.
காங்கிரஸாரின் இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களை கட்சித் தலைவர் தங்கபாலு சந்தித்து அமைதிப்படுத்தினார். பின்னர் அவர்களுடன் தங்கபாலு பேச்சுவார்த்தையும் நடத்தினார்.












Click it and Unblock the Notifications