சரத்குமார் போட்டியில்லை-பாஜகவுக்கு பிரச்சாரம்
நெல்லை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரத்குமார் போட்டியிட மாட்டார். அவர் தமிழக பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என சமத்துவ மக்கள் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து சரத்குமார் நெல்லை தொகுதியிலும், ராதிகா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கையிலும் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில் ராதிகா தான் போட்டியிட போவதில்லை என கூறி மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து தற்போது சரத்குமாரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம். ஆனால், அவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய போவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நெல்லையில் சரத்குமாருக்கு பதிலாக சமகவின் வர்த்தக அணி நிர்வாகி எஸ்ஆர்வி ரத்தினம் போட்டியிடலாம் என தெரிகிறது.
15 தொகுதியில் போட்டி...
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலளர் நாகராஜன் கூறுகையில்,
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு, பனை, தென்னை தொழிலாளர்களின் நீண்ட கோரிக்கையான கள் இறக்குவதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையும் திருப்தி அளிக்கவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி விரைவில் ஐநாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் வேட்பாளர்கள் பற்றி அறிவிக்கப்படும். குறைந்தது 10 அல்லது 15 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி கட்சி சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி இது தயாரிக்கப்படும்.
மத்தியில் எங்களது கூட்டணி கட்சி ஆட்சி அமைந்தால் இலங்கைப் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
பாஜக கூட்டணியில் டி ராஜேந்தர்...
இந்நிலையில் டி ராஜேந்தரின் லட்சிய திமுக, பாஜக கூட்டணியில் இடம் கேட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இவர்களும் பாஜகவிடம் நெல்லை தொகுதியை கேட்பதாக தெரிகிறது. அதே போல் கார்த்திக்கின் நாடாளுமன்ற மக்கள் கட்சியுடன் பாஜக தொடர்ந்து பேசி வருகிறது.
இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு நாளை துவங்குகிறது. இதையடுத்து பாஜக கூட்டணியில் நிலவி வரும் பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications