வசனம் பேசும் விஜயகாந்த்-அனிதா ராதாகிருஷ்ணன்
உடன்குடி: உடன்குடி, சாத்தான்குளம் மக்களின் ஜீவாதாரமான சடையநேரி கால்வாய் வரலாறு பற்றி விஜயகாந்துக்கு என்ன தெரியும் என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நடிகர் விஜயகாந்த் உடன்குடி சாத்தான்குளம் பகுதி மக்களின் ஜீவாதார வாழ்வுக்கு வழி வகுக்கும் சடையநேரி கால்வாய் பற்றி பேசியிருக்கிறார். அவருக்கு இந்த கால்வாயின் வரலாறு பற்றி என்ன தெரியும்.
சினிமாவில் எழுதி கொடுத்து பேசும் வசனம் போல இக்கால்வாயை பற்றி யாரோ எழுதி கொடுத்ததை உடன்குடியில் பேசிவிட்டு சென்றுள்ளார்.
சினிமா 3 மணி நேரத்தில் முடிந்துவிடும். அரசியல் என்பது பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இவர் சினிமா தான் அரசியல் என்று நினைத்து கொண்டு தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.
அதிமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இவர் போட்டியிடுவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.