எதிர்கட்சி மீது மட்டும் பாயும் 'குண்டாஸ்'-பாஜக
சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டம் எதிர்கட்சியினர் மீது தான் பாயும் என்பது வருண் காந்தி விவகாரத்தில் உண்மையாகியுள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக பிலிபித் தொகுதி பாஜக வேட்பாளர் வருண் காந்தி, தேசிய பாதுகாப்பு சட்டம் மூலம் கைது செய்யப்பட்டார்.
ந்நிலையில் இது குறித்து இல கணேசன் வெளியிட்ட அறிக்கையில்,
'தேசம் மற்றொரு பிரிவினையைச் சந்திக்க நேரிடும்' என்று டெல்லி ஜும்மா மஸ்ஜித்தின் இமாம் புகாரியும், 'பாரதம் பல துண்டுகளாகச் சிதறும்' என்று காஷ்மீர் முப்தி முகம்மது சயீத் கட்சியின் தலைவர் மெகபூபாவும் பேசியுள்ளனர்.
'அதுபோலவே ராமர் ஒரு குடிகாரன்' என்று முதல்வர் கருணாநிதியும், 'நான் ஒரு இந்துவாக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்' என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் கூறியுள்ளனர்.
'காவல்துறை வாகனங்களைத் தீயிடுங்கள். துப்பாக்கி ஏந்துங்கள். மார்க்சிஸ்டுகளை கொல்லுங்கள் அல்லது உயிருடன் புதையுங்கள். ஜோதிபாசுவையும் அவரது ஆள்களையும் தீர்த்துக் கட்டுங்கள். இனி அடி வாங்கிக் கொண்டிருக்க வேண்டாம். திருப்பி அடியுங்கள்' என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஏ.பி.ஏ. கனிகான் சௌத்ரி பேசியதாக ஜனவரி 14-ம் தேதி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது.
அப்போதெல்லாம் பாயாத தேசிய பாதுகாப்புச் சட்டம் தேவைப்படும்போது, தங்களுக்கு தேவையில்லாதவர்கள் மீது பாயும் சட்டம் என்பது வருண் காந்தி விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது என கூறியுள்லார் இல கணேசன்.