ஈழப் பிரச்சினையை குழப்புகிறார் கருணாநிதி - நெடுமாறன் கண்டனம்
சென்னை: இலங்கைப் பிரச்சினையில் தனது கட்சியின் நிலையை விளக்குவதாக கூறி அப்பிரச்சினையை குழப்பி வருகிறார் முதல்வர் கருணாநிதி என்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மக்களால் ஜனநாயக முறையில் வாக்களித்து தமிழ் ஈழம் மலர்ந்தால் மகிழ்ச்சி அடையும் முதல் நபர் நான்தான் என்கிறார் கருணாநிதி.
இலங்கைத் தமிழர்களுக்காக 50 ஆண்டு காலமாக பாடுபட்டு வருகிறேன் என்று தனக்குத் தானே கூறிக் கொள்ளும் கருணாநிதிக்கு, இலங்கை மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் சிங்களர்கள், 30 சதவீதம் பேர்தான் தமிழர்கள் என்பது தெரியாதா?.
ஈழத் தமிழர்கள் வாக்களித்து அதன் அடிப்படையில் தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுவதை விட்டு விட்டு, இலங்கை மக்கள் வாக்களித்து தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.
இதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அவர் வேண்டும் என்றே குழப்புவது புலனாகிறது.
இலங்கையில் 1977ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாகத்தான் பெரும்பான்மையான தமிழர்கள் வாக்களித்தனர். தமிழ் ஈழத்தை ஆதரிப்போரைத்தான் கடந்த பல வருடங்களாக அவர்கள் எம்.பிக்களாக தேர்வு செய்து வருகின்றனர்.
தமிழ் ஈழம் உருவாவதை அங்கீகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதை, நெருக்குதல் கொடுக்கும் தனது பொறுப்பிலிருந்து விலகி விட்டார் கருணாநிதி. இலங்கைத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு தனித் தமிழ் ஈழத்திற்கே என்பதை அவர் உணரத் தவறி விட்டார் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications