பொருளாதார மீட்சி: ஜி-20 நாடுகள் 1.1 டிரில்லியன் டாலர்!

ஐஎம்எப், உலக வங்கியின் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்ற அவர், இந்த சிக்கலிலிலும் கூட வளர்ந்த நாடுகள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவது தவறானது என்றார்.
லண்டனில் நடந்த ஜி-20 அமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பேசிய அவர்,
பொருளாதார நடவடிக்கைகள் சுருங்கியதாலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாலும் எல்லா நாடுகளுமே தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவது என்பது புரிந்து கொள்ளத்தக்கது தான்.
ஆனால் வளரும் நாடுகளில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றை வலுக்கட்டாக திணித்துவிட்டு, இப்போது சிக்கல் வந்தபின் வளரும் நாடுகள் தங்களை மட்டும் காக்கும் நடவடிக்கைகளில் இறங்குவது சரியல்ல.
உலகின் பெரும்பாலான மக்களைக் கொண்டுள்ள வளரும் நாடுகளைப் புறக்கணித்துவிட்டு மேற்கொள்ளப்படும் எந்தவித புத்துயிர் ஊட்டும் பொருளாதார நடவடிக்கைகளும் பயன் தராது.
இந்தச் சிக்கலிலிருந்து மீள நீண்டகால திட்டங்கள் அவசியம். அதில் எல்லோருக்கும் பங்கு இருக்க வேண்டும். எல்லா நாடுகளும் பொருளாதார மீட்சி பெற ஐஎம்எப் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஐஎம்எப்புக்கு அளிக்கும் தொகையை வளர்ந்த நாடுகள் பல மடங்காக அதிகரிப்பதன் மூலம் வளரும் நாடுகளில் தொழில், வர்த்தக நடவடிக்கைகளை முடுக்கி விட முடியும். இதன் பலன் வளர்ந்த நாடுகளுக்கும் கிடைக்கும்.
கடந்த 60 ஆண்டுகளில் இருந்திராத வகையில் பொருளாதார நெருக்கடி தோன்றியிருக்கிறது. இதற்கு முன்னால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வளரும் நாடுகள் உங்களுக்குச் சுமை அல்ல, உதவிகரமாக இருப்பவை என்பதை இந்த முறையாவது அங்கீகரிக்க வேண்டும்.
உலக அளவில் வங்கி, நிதித்துறை நடவடிக்கைகளைச் சீர்படுத்த வேண்டும். இதை படிப்படியாகச் செய்ய வேண்டும்.
அரசு என்பது மேற்பார்வை பார்த்தால் மட்டும் போதாது, பொருளாதார நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தி, தலைமை தாங்கி முன்னாலிருந்து வழி நடத்த வேண்டும்.
முறையற்ற வகையில் சம்பாதித்த பெரும் பணத்தை வங்கிகளின் ரகசிய கணக்குகளில் போடும் வழக்கத்துக்கு கட்டுப்பாடு தேவை. இதனால் வளரும் நாடுகளின் செல்வம் சுரண்டப்படுகிறது. இது மனிதகுலத்துக்கே எதிரான துரோகம். சொல்லப்போனால் இதுதான் பல நாடுகளின் பொருளாதாரச் சீர்குலைவுக்கே காரணம் என்றார் சிங்.
பொருளாதார மீட்சிக்கு ஜி-20 நாடுகள் ரூ.55 லட்சம் கோடி:
இந் நிலையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.55 லட்சம் கோடி ஒதுக்குவது என்று இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றை சர்வதேச நிதியம், உலக வங்கி மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒபாமாவுடன் மன்மோகன் சந்திப்பு:
முன்னதாக அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்தித்துப் பேசினார்.
தீவிரவாதம், பாகிஸ்தான், ஆப்கானி்ஸ்தான், பொருளாதார நெருக்கடி என பல்வேறு பிரச்சனைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அதிபரான பின் பிரதமரை ஒபாமா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
மன்மோகன் அட்டகாசமான மனிதர்-ஒபாமா:
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் மிகச் சிறந்த அறிவாளி, அட்டகாசமான மனிதர். அவருடன் பொருளாதார விஷயங்களைப் பேசியபோது அசந்து போனேன்.
பிரதமராகும் முன்பே நிதியமைச்சராக இருந்தபோதே இந்தியாவை மிகப் பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு போனவர். அவரை உலக நாடுகள் காப்பியடித்தால் தவறேயில்லை என்றார்.
ஒபாமா குறித்து மன்மோகன் சி்ங் கூறுகையில், உங்களுக்கு இந்தியாவில் மிகப் பெரிய மரியாதையும் அன்பும் உளளது. அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டிய தலைவர் நீங்கள். நம் இரு நாடுகளுக்கும் ஒரே கனவுகள் தான்.
இந்தியா வந்தால் உங்களுக்கு பெரும் வரவேற்பு காத்திருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications