புலிகளின் 2 முக்கிய தளபதிகள் பலி: ராணுவம்
புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்த சண்டையில் இவர்கள் இருவர் உள்பட 47 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கோபித் மற்றும் அமிதாப் ஆகிய இருவரும், பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கி வந்தனர். அனந்தபுரம் என்ற கிராமத்தை தக்க வைப்பதற்காக நடந்த சண்டையின்போது இவர்கள் இருவர் உள்பட 47 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், அனந்தபுரம் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
அனந்தபுரம் கிராமம்தான் விடுதலைப் புலிகளுக்கான முக்கிய சாலை மார்க்கமாக இருந்து வந்தது. இந்த வழியாகத்தான் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை விடுதலைப் புலிகள் அனுப்பி வந்தனர். தற்போது அது தடுக்கப்பட்டு விட்டதாக ராணுவம் கூறுகிறது.
வெடிகுண்டு நிபுணர் பரமநாதா மாஸ்டர் பலி:
இதற்கிடையே, கிழக்கில் உள்ள அம்பாரை மாவட்டம் பனாமா என்ற இடத்தில் நடந்த மோதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெடிகுண்டு நிபுணர் பரமநாதா மாஸ்டர் உள்ளிட்ட 13 விடுதலைப் புலிகள் பலியானதாக கூறப்படுகிறது.
பனாமாவில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் மீது ராணுவம் இன்று காலை ஆறே கால் மணியளவில் தாக்குதல் நடத்தியது.
இதில் பரமநாதா மாஸ்டர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 13 உடல்களையும் மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது