சிபிஐ வேட்பாளர்கள் 5ம் தேதி தேர்வு- தா பாண்டியன்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வரும் 5ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இந்தக் கட்சிக்குத்தான் முதன்முதலில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தக் கட்சி வட சென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையி்ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேட்பாளர் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் பாண்டியன் கூறுகையில்,
கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
அப்போது 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்படும். அதன் பின்னர் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்படும். தலைமையகத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள். 10ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
வட சென்னையில் தா.பாண்டியனே போட்டியிடுவார் என்று தெரிகிறது.