கடும் நடவடிக்கை-குமரி காங்.குக்கு தங்கபாலு எச்சரிக்கை
சென்னை: தொண்டர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கட்சித் தலைமையிடம்தான் கூற வேண்டும். மாறாக, கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இதனால் அந்த மாவட்ட காங்கிரஸார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சத்தியமூர்த்தி பவன் அமளி துமளியாக காணப்படுகிறது.
தொகுதி கிடைக்கும் வரை போராட்டத்தை விட மாட்டோம் என குமரி மாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜான் ஜேக்கப் மற்றும் ஜெயபால் ஆகியோர் கூறியுள்ளனர். ஒரு வேளை திமுக தொகுதியைத் தராவிட்டால் திமுகவுக்கு யாரும் வாக்களிப்பதில்லை என்ற முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இவர்களுடன் தங்கபாலு அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் ஜெயபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், நல்ல முடிவு வரும் பொறுத்திருங்கள் என்று தங்கபாலு கூறியிருக்கிறார். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அப்படி நாங்கள் எதிர்பார்க்கும் முடிவு வராவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம். தேவைப்பட்டால் இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்திக்க இருக்கிறோம்' என்றார்.
பின்னர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் வாங்கப்படுகின்றன. ஐவர் குழு கூட்டி அந்த மனுக்களை பரிசீலனை செய்வோம். கடந்த ஒரு மாதகாலமாகவே ஏராளமான மனுக்கள் வந்துள்ளன.
தேர்தலில் போட்டியிட இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் கட்சித்தலைவர்கள் கூடி பேசுவது வாடிக்கையானது.
கன்னியாகுமரி தொகுதி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய கருத்தை சொல்லியிருக்கிறோம். நிர்வாகிகளை பொறுமையாக இருக்க சொல்லியிருக்கிறோம்.
மற்ற கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லும் கூட்டணியில் இருக்கிறோம்.
கூட்டணி கட்சிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். காங்கிரஸ், திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் சில தொகுதிகள் கேட்டார்கள். நாங்கள் சில தொகுதிகளை கேட்டோம். வேண்டுமென்றே கன்னியாகுமரி தொகுதி விட்டுக் கொடுக்கப்படவில்லை. தொண்டர்களை ஒருங்கிணைத்து கூட்டணியை வெற்றி பெற செய்வோம்.
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலே கிடையாது. நான் தலைவராக வந்த பிறகு கோஷ்டி பூசல்களை கட்டுப்படுத்தியிருக்கிறேன். காங்கிரசின் உள்கட்சி அரங்குகளில் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதை விடுத்து, வெளியே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சனைகளை மாவட்ட, மாநில தலைமையிடமோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமோ தெரிவிக்க வேண்டும். அதை மீறி, அறிக்கை விடுவது போன்ற கட்சிக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்படியானால் குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை வருமா என்ற கேள்விக்கு பொறுத்திரு்நது பாருங்கள் என்றார் தங்கபாலு.