மகனை உருப்படியாக வளர்க்காத மேனகா என்னை விமர்சிப்பதா?: மாயா பாய்ச்சல்
வருண் காந்தியை வைத்து மேனா காந்திக்கும், மாயாவதிக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது.
வருண் காந்தியை சிறைக்குச் சென்று பார்க்க மேனகா காந்திக்கு உ.பி. அரசு திடீரென தடை விதித்தது. இதனால் கோபமடைந்த மேனகா, மாயாவதி ஒரு குழந்தை பெற்றவராக இருந்திருந்தால் ஒரு தாயின் வலி தெரிந்திருக்கும் என்று கூறியிருந்தார்.
இதற்கு மாயாவதி தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை அழைத்து அவர் பேசுகையில், இவ்வளவு பேசும் மேனகா காந்தி தனது மகனுக்கு ஏதாவது நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா?. அப்படி அவர் செய்திருந்தால் இந்நேரம் அவரது மகன் சிறையில் வாடியிருக்கத் தேவையில்லேயே?.
சட்டத்தை மீறிச் செயல்படுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. எனது ஆட்சி, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும்.
தாய்ப் பாசம் பற்றிப் பேசும் மேனகா, நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தாய்மார்களின் கவலைகள் குறித்தும் கவலைப்பட வேண்டும்.
மகனுக்கு நல்ல புத்திமதி சொல்வதை விட்டு விட்டு அவரை ஆதரித்துப் பேசும் மேனகாவின் செயல் கண்டனத்துக்குரியது.
ஒரு மகனின் வலிக்காக வருத்தப்படுகிறார் மேனகா. நான் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பிள்ளைகளுக்காக கவலைப்படுகிறேன்.
பிள்ளை பெற்றால்தான் தாய் என்றில்லை. பிள்ளை பெற்றால்தான் தாய்மையின் அருமை புரியும் என்றில்லை. அன்னை தெரசா என்ன குழந்தை பெற்றவரா. அவர் உலக மக்களை தன் பிள்ளைகளாக நினைத்து பாசம் காட்டவில்லையா?
என்னைப் பற்றி அவர் பேசிய அவமானகரமான பேச்சுக்காக என்னிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மாயாவதி.
மாயாவதிக்கும், மேனகாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் புதிய சண்டைக்கு மத்தியில், வருண் காந்தியைப் பார்க்க நேற்று திடீரென உ.பி. அரசு மேனகா காந்திக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் சிறைக்குச் சென்று தனது மகனைப் பார்த்து விட்டு வந்தார்.