லக்னோ: சமாஜ்வாடி வேட்பாளர் நபீசா அலி - மான்யதா போட்டியில்லை
டெல்லி: லக்னோ தொகுதிக்கான சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக முன்னாள் நடிகை நபீசா அலி போட்டியிடுகிறார். எதிர்பார்க்கப்பட்டது போல சஞ்சய் தத்தின் மனைவி மான்யதாவை அக்கட்சி நிறுத்தவில்லை.
லக்னோ தொகுதியில் சஞ்சய் தத்தை நிறுத்த சமாஜ்வாடி கட்சி உத்தேசித்திருந்தது. ஆனால் அதற்கு சுப்ரீம் கோர்ட் முட்டுக்கட்டை போட்டு விட்டதால் அவருக்குப் பதில் மான்யதா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் லக்னோவுக்கான வேட்பாளராக நபீசா அலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நடிகையான நபீசா அலி தற்போது சமூக சேவகியாக இருக்கிறார். அவருக்கு சஞ்சய் தத் முழுமையாக பிரசாரம் செய்யவுள்ளார்.
இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் கூறுகையில், முதலில் காங்கிரஸ் கட்சிதான் நபீசாவை லக்னோ தொகுதியில் நிறுத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால் நாங்கள் சமாஜ்வாடியின் கொள்கைகளைக் கூறி எங்களது கட்சி சார்பில் போட்டியிட நபீசாவை கேட்டுக் கொண்டோம். அதை அவர் ஏற்றுக் கொண்டு போட்டியிட சம்மதித்தார் என்றார்.