எச்சரிக்கையை மீறி ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியா - ஒபாமா எச்சரிக்கை
சியோல்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா இன்று நீண்ட தூர ராக்கெட்டை ஏவி பரிசோதித்தது. இதை அது செயற்கைக் கோளும் ஏவும் பணியே என்று கூறினாலும் கூட, நீண்ட தூர ஏவுகணை சோதனைதான் இது என்று அமெரிக்கா கூறுகிறது.
இன்று காலை 8 மணிக்கு இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது. ஜப்பானைக் கடந்து இந்த ராக்கெட் சென்றது.
இந்த சோதனைக்கு ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தன.
வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் வடகிழக்கு ஆசிய பகுதியில் பதட்டம் ஏற்படும் என கருதி ஐநா கடந்த 2006ல் ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு அனுமதி மறுத்தது.
செயற்கோளை அனுப்பும் ராக்கெட் தொழில்நுட்பமும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கான தொழில்நுட்பமும் கிட்டதட்ட சமமாக இருக்கும் என்பதால் வடகொரியா செயற்கைகோளை செலுத்துவதாக கூறி ஏவுகணையை பரிசோதித்துப் பார்க்க முடிவு செய்தது.
இதற்கு ஐநா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா ஆகியவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. சோதனையை கைவிடுமாறு வலியுறுத்தின. ஜப்பான் தங்களது வான் எல்லைக்குள் வடகொரியாவின் ஏவுகணை பறந்தால், அதை சுட்டு வீழ்த்துவோம் என எச்சரித்தது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் இன்று வட கொரியா தனது ராக்கெட் சோதனையை நடத்தியுள்ளது. கிவாங்மியாங்சாங் 2 என்ற செயற்கோளை சுமந்து சென்ற அந்த ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தியது.
அது ஜப்பான் மீது பறந்து சென்றபோதும், ஜப்பான் அரசு ஏற்கனவே கூறியபடி அதை சுட்டுத் தடுக்கவில்லை.
இன்று வட கொரியா செலுத்திய ராக்கெட் (ஏவுகணை) அமெரிக்காவின் அலாஸ்கா வரை செல்லக் கூடியதாக கருதப்படுகிறது. மேலும் இது அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
வட கொரியாவின் இந்த சோதனைக்கு அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை சோதனையை அடுத்து ஜப்பான் பிரதமர் டாரோ அசோ டோக்கியோவில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டினார். அதில், நமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது நமது கடமை. ஏவுகணை சோதனை குறித்து தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம் என்றார்.
இந்நிலையி்ல் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இந்த தகவல் செக் குடியரசு நாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டு தலைநகர் பிரேக்கில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ஐநாவின் விதிமுறைகளை மீறும் நாடுகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுதங்கள் பரவுவதை உலக மக்கள் ஒற்றுமையாக செயல்பட்டு தடுக்க வேண்டும்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் இருக்க கூடாது. இந்த சோதனை வடகிழக்கு ஆசியாவி்ல் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.