குமரி காங். நிர்வாகிகளுக்கு 5 பவுன் தங்கம் பரிசு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனுக்கு அதிக ஓட்டுக்கள் வாங்கி தரும் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தலா 5 பவுன் தங்க நகை பரிசாக கொடுக்கப்படும் என அம்மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கதிரேசன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படு்ம் என நினைத்திருந்த அம்மாவட்ட காங்கிரசாருக்கு அந்த தொகுதி திமுகவுக்கு விட்டுகொடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு முன்னதாக போராட்டம் நடத்தினர். பின்னர் காங்கிரஸ் மேலிடம் ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தியது.
இந்நிலையில் அங்கு நிற்கும் திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்டுக்கு காங்கிரசாரின் ஆதரவு முழுமையாக கிடைக்குமா என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து குமாரி மாவட்ட காங்கிரசுக்கு அம்மாவட்ட துணைத் தலைவர் கதிரேசன் உற்சாக டானிக் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில்,
கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களில் வெற்றி கிடைத்தது. தற்போது 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் மீண்டும் 40 தொகுதிகளிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் உள்ள நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 பேரவைத் தொகுதிகள் உள்ளது.
இந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர் ஜெ.ஹெலன் டேவிட்சன்னுக்கு கூடுதலான வாக்குகள் பெற்று தரும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படும் என்றார் அவர்.